பக்கங்கள்

விமர்சனம் + விருது

 சென்ற வருடம் "நினைவுகள" அப்படின்னு ஒரு தொடர் கதை எழுதினேன் . அதைப் பற்றி ரொம்ப சீக்கிரமா ஒருத்தங்க விமர்சனம் பண்ணியிருக்காங்க. இதுவரை புத்தகத்தை (நாவல்/சிறுகதை தொகுப்பு) இவற்றை விமர்சனம் செய்துப் பார்த்திருக்கிறேன்.

முதல் முறையாக என் கதைக்கும் ஒருத்தர் விமர்சனம் எழுதி இருக்கார்.  "குட்டி சுவர்க்கம்" ஆமினா அவர்களுக்கு நன்றி. அவங்கதான் அந்த விமர்சனத்தை எழுதி உள்ளார்கள்.

நீங்கள்  குறிப்பிட்டக் குறைகளை கவனத்தில் கொள்கிறேன் .

 விமர்சனத்தைப் படிக்க இங்கே செல்லவும் 

திருமதி  கீதா அவர்கள் எனக்கு ஒரு விருது கொடுத்துள்ளார்கள். அந்த விருது விவரம் இங்கே

இருவருக்கும் எனது உளமார்ந்த நன்றிகள்


அன்புடன் எல்கே

ஷ்யாமளா - 2






அன்றுதான் சேலம் கிளையின் மேலாளர் இடத்திற்கான நேர்முகத் தேர்வு. வந்த விண்ணப்பங்களில் வடிக்கட்டப்படப் பின் எஞ்சிய மூன்று பேரை இறுதி கட்ட தேர்வுக்கு சென்னைக்கு அழைத்திருந்தனர்.  வந்திருந்த மூன்று பேரில் அவள் ஒருவளே பெண். அந்த நிறுவனத்தைப் பற்றி ஏற்கனவே கேள்விப் பட்டிருந்ததால் நம்பிக்கை இன்றியே அவள் விண்ணப்பம் செய்திருந்தாள். பொதுவாய் அந்த நிறுவனத்தில் மேலாளர் பதவிக்கு பெண்களை எடுப்பதில்லை என்றுக் கேள்விப் பட்டதால் அவ நம்பிக்கை கொஞ்சம் இருந்தது.


 சாரசரி தமிழ் பெண்ணின் உயரம், கடந்து செல்பவர்களை திரும்பி பார்க்க சொல்லும் முகம்.அவள் முகத்திற்கு அவளது கண்கள் கொஞ்சம் பெரிதுதான். மெலிதான மையினால்  அதற்கு கரை கட்டியிருந்தாள்.  அவள் மிக மெல்லிய லிப்ஸ்டிக் பூச்சு கண்ணுக்கு உறுத்தாமல் ரசிக்க வைப்பதாய் இருந்தது.  அவள் அணிந்திருந்த காட்டன் புடவை அவள் நிறத்திற்கு மெருகூட்டுவதாக இருந்தது. கூந்தலைப் பின்னாமல் லூசாக விட்டிருந்ததிலும் ஒரு அழகும் ஒழுங்கும் இருந்தது .



கல்லூரிப் படிப்பை முடித்து இரண்டு வருடங்களில் இரண்டு சிறிய நிறுவனங்களில் பணி புரிந்திருந்தாலும் , ஒரு விதப் பதற்றம் அவளிடையே இருந்தது. விண்ணப்பம் அனுப்பியதில் இருந்தே ஒரு விதமான சஞ்சலம் அவள் மனதில் இருந்துகொண்டே இருந்தது. மனதில் பதற்றம் இருந்தாலும் அவள் முகம் அதைப் பிரதிபலிக்கவில்லை.


மூன்று பேரில் இவளைக் கடைசியாகத்தான் அழைத்தனர். உள்ளே நுழையும் முன் ஒருமுறை புடவையை சரிபார்த்துக் கொண்டு உள்ளே நுழைந்தாள். நாற்பது வயதுக்கு மேற்ப்பட்ட ஒருவரை அங்கே எதிர்பார்த்த ஷ்யாமளா, சரவணனை கண்டு சிறிது ஆச்சர்யமே அடைந்தாள். இருப்பினும் அதை வெளிக்காட்டாமல் அவனுக்கு வணக்கம் சொல்லிவிட்டு , அவன் எதிரே இருந்த இருக்கையில் அமர்ந்தாள். நேரம் ஓட , அந்த நேர்முகத் தேர்வும் அரைமணி நேரம் கழித்து முடிந்தது. அவளை அறைக்கு வெளியே   காத்திருக்க சொன்ன சரவணன் , மீண்டும் ஒருமுறை அவளைப் பற்றி எடுத்தக் குறிப்புகளில் கண்ணை ஓட்டினான் .


பொதுவாய் பெண்களிடம் அதிகம் கவனம் செலுத்தாத சரவணனுக்கு ஷ்யாமளா , நேர்முகத் தேர்வில் நடந்துக் கொண்ட விதம் பிடித்திருந்தது. அதிகப்படியான அலட்டல் இல்லாமல், தேவைக்கதிகமாய் பேசாமல் இருந்ததும், அவள் நேர்த்தியாய் உடை அணிந்திருந்ததும் அவளது மதிப்பை அவனிடம் உயர்த்தி இருந்தது. சிறிது நேரம், அவளைப் பற்றியக் குறிப்புகளை மீண்டும் ஒருமுறைப் படித்துவிட்டு, அவளை அந்த வேலைக்குத் தேர்வு செய்ய முடிவெடுத்தான். பின் அவளை மீண்டும் அழைத்து அதை தெரிவித்துவிட்டு, அடுத்த நாள் முதல் வேளையில் சேர சொன்னான்.


அடுத்த சில நாட்கள், அவளுக்கு வேலையைப் பற்றிய பயிற்சி தருவதில் கழிந்தது. பொதுவாய் , இந்த மாதிரி பயிற்சிகளை மற்றவர்களிடம் தள்ளி விடும் சரவணன், ஷ்யாமளாவிற்கு அவனே பயிற்சி அளித்தது மற்றவர்களுக்கு சிறிது ஆச்சர்யத்தை அளிக்க செய்தது. அவர்கள் கற்பனை செய்தப் படி எதுவும் நடக்கவில்லை என்றாலும் , சரவணனின் மனம் ஷ்யாமளாவின் பக்கம் கொஞ்சம் நகர ஆரம்பித்திருந்தது . பல தரப்பட்ட பெண்களை சந்த்திருந்தாலும் , ஷ்யாமளாவின் கண்கள் அவன் மனதை ஊடுருவி இருந்தது.

ஒரு வார பயிற்சிக்குப் பின் , அவளை சேலம் கிளம்ப சொன்ன சரவணன், தான் இரண்டு நாட்களில் வருவதாய் சொல்லி இருந்தான். அவன் சென்னையில் இருந்து கிளம்ப வேண்டிய தினத்தின் மாலையில் வீட்டிற்கு கிளம்புமுன் வந்த அந்த  இ மெயில் அவனை பெரிதும் சஞ்சலப்படுதியது.

-தொடரும்
 


அன்புடன் எல்கே

மனம் போன போக்கில் - 1

 நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சமீபத்தில் சென்றிருந்தேன். எப்பொழுதுமே ஆஞ்சநேயர் கோவில்களில் எனக்கு மன நிம்மதி கிட்டும். அதனாலேயே மனம் மிக சஞ்சலம் அடையும் சமயங்களில் ஆஞ்சநேயர் கோவிலுக்கு செல்வது வழக்கம். நங்கநல்லூர் சென்று வெகு நாட்கள் ஆகிவிட்டதால் இந்த முறை அங்கு சென்று வரலாம் என்ற எண்ணத்தில் மாலையில் சென்றிருந்தோம். அப்பொழுதுதான் கோவில் திறந்திருந்தக் காரணத்தினால் கூட்டம் குறைவாகவே இருந்தது. வழக்கமான தரிசனம் சிறிது நேரம் தியானம் எல்லாம் முடிந்து , உள்ளிருந்த கிருஷ்ணரை தரிசித்து வலம் வருகையில் நடந்தது முதல் சம்பவம்.

முன்பு குங்குமம் குடுக்க ஒருவரை நியமித்திருந்தனர். இப்பொழுது அப்படி யாரையும் காணவில்லை. அதற்கு பதில் ஒரு ஸ்டேண்டில் குங்குமத்தை கொட்டி மேலே துவாரமிட்டிருந்தனர். இந்த முறையில் குங்குமம் அதிகம் வீணாகாது என்றாலும், அர்ச்சகர் கையில் குங்குமம் பெறுவது என்பதே பொருத்தமாக இருக்கும் என்பது எனது எண்ணம். அதற்கு காரணம் , அவர் குங்குமம் தரும்பொழுது ஏதவாது ஆசிர்வாதத்துடன் தான் தருவார். ஆதுதான் பொருத்தமாக இருக்கும். இப்படி வீட்டில் போட்டு வைத்துக் கொள்வது போல் எடுத்து வைத்துக் கொள்வது கோவில்களுக்குப் பொருந்தாது. அது சரியுமல்ல .

அடுத்தது , இன்னொரு அறிவிப்புப் பலகை வைத்திருந்தனர். அதாவது அந்தக் கோவிலில் எவை எவை பூஜைக்கு ஏற்கப்படுவதில்லை என்று . அதில் கற்பூரம் நூலினால் கட்டப்பட்ட மாலைகள் இரண்டும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே. ஆனால் அதில் கூறப்பட்டிருந்த "துளசி மாலை, பூ மாலை மற்றும் சில " ஏற்கக் கூடியதாக இல்லை. எளியனும் எளியனாகிய கண்ணன் " ஒரு துளசி இலையோ இல்லை ஒரு உத்தரணி தண்ணீரோ " தனக்கு நைவேத்தியமாக தந்தால் போதும் என்று சொல்லி இருக்க, கோவில் நிர்வாகத்தினர் இப்படி நடந்துக் கொள்வது சரியல்ல.

நிர்வாகத்தின் மேல் மேலே குறிப்பிட்டுள்ள இரண்டுக் குறைகள் இருந்தாலும், கோவிலைத் தூய்மையாக வைத்துள்ளனர். அதற்கு கண்டிப்பாக பாராட்டுத் தெரிவித்தே ஆக வேண்டும். இன்னொன்று , பொதுவாக பொது இடத்தில் குப்பைப் போடுவதில் ஆர்வமுள்ள நம் மக்கள் , இங்கு அப்படி நடக்கவில்லை. இதுவே அரசாங்கத்தின் அதிகாரத்தின் கீழ் உள்ள கோவில் என்றால், கேட்பார் யாருமில்லை என்ற எண்ணத்தில் குப்பை போடுவோம். இங்கே தனியார் நிர்வாகம்  என்றக் காரணமா ? இல்லை கட்டுப்பாடுகளும் கண்காணிப்பும் இருந்தால் மட்டுமே விதிகளைப் பின்பற்றுவோம் என்ற எண்ணம் காரணமா ??

விதி என்றவுடன் , இன்னொன்று நினைவிற்கு வருகிறது. ட்ராபிக் சிக்னல்களை பற்றி திவ்யாவிற்கு சொல்லிக் கொடுத்திருந்தேன். இன்று சிக்னலில் நின்றுக் கொண்டிருந்த பொழுது, ஒரு அரசாங்க பேருந்து, சிகப்பை மதிக்கமால் சென்றது. அதைப் பார்த்த திவ்யா " ரெட் போட்டிருந்தா நிக்கணும்னு சொன்ன இல்ல,அப்ப ஏன் இந்த பஸ் நிக்காம போகுது ? என்றுக் கேட்டாள். என்னிடம் பதில்தான் இல்லை.

என்ன சொல்வது நண்பர்களே ? பதில் கூறுங்கள்...

இது  அதீதம் இதழில் வந்துள்ளது. அதற்கான சுட்டி

மனம் போன போக்கில் - 1

அன்புடன் எல்கே