Page Nav

HIDE

Grid

GRID_STYLE

Gradient Skin

Gradient_Skin

இந்த வலைப்பதிவில் தேடு

பிரபலமான இடுகைகள்

Breaking News

latest

ஜகத்குரு 14- மனீஷா பஞ்சகம்

ஆதி சங்கரரின் காலத்தில் , தீண்டாமை எனும் கொடுமை மிக அதிக அளவில் இருந்தது. இதில் சங்கரருக்கு துளியும் சம்மதம் இல்லை என்றாலும், வெறும் வாக்காக...

ஆதி சங்கரரின் காலத்தில் , தீண்டாமை எனும் கொடுமை மிக அதிக அளவில் இருந்தது. இதில் சங்கரருக்கு துளியும் சம்மதம் இல்லை என்றாலும், வெறும் வாக்காக சொன்னால் யாரும் கேட்கப் போவது இல்லையே, எப்படி இவர்களை திருத்துவது என்ற எண்ணத்திலே காத்திருந்தார். அதற்கான சந்தர்ப்பமும் வந்தது. காசியிலே அவர் தனது அத்வைத கொள்கைளை மற்றவர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்த காலம் அது.

அவர் மனதிலே தீண்டாமை இல்லை எனினும் ,அவரை சுற்றி இருந்தவர்கள் மனதில் ஆழ பதிந்திருந்தது அது. ஒருநாள் தன் சீடர்கள் புடைசூழ, கங்கையில் குளிக்க சென்றுக் கொண்டிருந்தார். காசியின் வீதிகள் பொதுவாக மிகக் குறுகலாகத் தான் இருக்கும். அப்படி பட்ட ஒரு வீதியின் வழியே சென்றுக் கொண்டிருந்தபொழுது , எதிரே ஒரு சண்டாளன்,தன் மனைவியுடன், நான்கு நாய்களை இழுத்துக் கொண்டு வந்துக் கொண்டிருந்தான். அவன் மனைவியின் கையிலோ மதுக் குடம். 

அவனைக் கண்டவுடன், இவருடன் இருந்தவர்கள் முகம்  சுருங்கியது. சங்கரர்  அவனைப் பார்த்து "விலகிச் செல் சண்டாளனே! (தூரம் அபசரரே சண்டாள:) என்றுக் கூறுகிறார். அதைக் கேட்டவுடன் அந்த சண்டாளன் முகத்தில் புன்னகைப் பூக்க "யாரை விலகச் சொல்கிறீர்கள் ? இந்த உடலையா இல்லை இந்த உடலில் உள்ள ஆன்மாவையா ? எதை விலகச் சொல்கிறீர்கள்?"  என்றுப் பொருள்படும் வகையில் கேள்விக் கேட்கிறான்.

 இதைக் கேட்டவுடன் , சங்கரர் அந்தச் சண்டாளனுக்கு சாஷ்ட்டாங்க நமஸ்காரம் செய்து வணங்கி "நீர் யார் அதை சொல்வீராக "என்றுக் கேட்க சிவபெருமான் பார்வதியுடன் அவருக்குக் காட்சி அளிக்கிறார். அவருடன் வந்த நாய்கள் நான்கு வேதங்கள்,பார்வதி வைத்திருந்தது அமிர்தக் குடம். 

இதைத் தொடர்ந்து சங்கரர் இயற்றியதுதான் மனீஷா பஞ்சகம். மனிஷா என்றால் ஒப்புதல் என்று அர்த்தம். பஞ்சகம் என்றால் ஐந்து. சண்டாள வடிவத்தில் வந்த சிவபெருமான் எழுப்பியக் கேள்விகளையும்,அவற்றில் பொதிந்துள்ள கருத்துகளையும் ஏற்றுக்கொண்டு சங்கரர் பாடியது. அந்த மனிஷா பஞ்சகம் கீழே. 

அன்னமயாத் அன்னமயம் அதவா
சைதன்யமேவ சைதன்யாத்|
யதிவர துரீக்ருதம் வாஞ்சஸி
கிம் ப்ரூஹி கச்ச கச்சேதி||

விலகுவில கென்னும் அறிஞர் தலைவ விருப்பமோ யாது மொழிக-உடலோ
உடலிடத்து அன்றி உயிரோ உயிரிடத்து சொல்வாய் உறவேண்டும் விலக்கு?

ஆதிசங்கரரைப் பார்த்து சண்டாளர் உருவில் வந்த சிவபெருமான் இவ்விதம் கேட்கிறார்; யதிகள் என்று அழைக்கப்படும் அறிஞர்கள், முனிவர்கள் ஆகியோருக் கெல்லாம் தலைவரைப் போன்று விளங்குபவரே! விலகிச் செல் என்று என்னை நோக்கிக் கூறினீரே? அன்னமயத்தால்ஆன இந்த உடல், மற்றொரு உடலில் இருந்து விலகிச்செல்ல வேண்டுமா? அன்றி அதனுள் உறைகின்ற அறிவு மயமாகிய (சைதன்ய ரூபமான) உயிர், அதாவது , ஜீவாத்மா மற்றொரு உயிரிடமிருந்து விலகிச் செல்ல வேண்டுமா? எந்த அர்த்தத்தில் விலகிச் செல் என்று கூறினீர்? அழிந்து விடக்கூடிய உடலுக்கு முக்கியத்துவம்
கொடுத்து, அதன் அடிப்படையில் பாகுபாடு பார்ப்பவன் ஆன்மீக வாதியாக மாட்டான். அப்படியானால், ஒரு ஜீவனை விட மற்றொரு ஜீவன் உயர்ந்தது என்று கூறமுடியுமா?
முடியாது. ஏனெனில் எல்லா உயிர் இனங்களிலும் ஒரே ஆன்மாதான் (பரமாத்மா தான்
வீற்றுள்ளது. அதனால்தான் இந்த இடத்தில் உயிரினங்களில் உள்ள உயிர் என்ற கருத்தைக் குறிப்பிட ஆன்மா என்ற சொல்லைக்கூட பயன்படுத்தாமல் சைதன்யம் (அதாவது பிரக்ஞை, அறிவு) என்ற வார்த்தையை சிவபெருமான் உபயோகித்துளார்.
ஏனெனில், அத்வைத சித்தாந்தப்படி, அனைத்து உயிரினங்களிலும் உறைகின்ற ஏக
பரமாத்மா, அதனதன் பிரகிருதிக்குத் தக்கபடி அதனதன் சைதன்யமாகப் பிரதிபலிக்கிறார். ஆகையால், ஓரே உயிரே அனைத்திலும் உறைவதால் அதனை விலகிச் செல் என்று எவ்விதம் கூற முடியும்? அடுத்ததாக, நேரடியாகவே அத்வைத சித்தாந்தத்தின்
அடிப்படையில் மேலும் சில கேள்விகளை அவர் எழுப்புகிறார்.

ப்ரத்யேக்வஸ்துனி நிஸ்தரங்க
ஸஹஜானந்தாவ போதாம்புதௌ|
விப்ரோ அயம் ஸ்சபவோ அயமித்யபி
மஹான்கோ அயம் விபேதப்ரம||

அலையில்லா நீர்நிலையில் ஆதவன் பிம்பம்போல் ஆனபொருள் யாவினிலும் ஆண்டவன் வீற்றுள்ளான் பார்ப்பானோ வேற்றானோ யாராம் உயர்வென்ற பாகுபாடும் ஐயமும் ஏன்? அலை அடிக்காததால், கலங்காமல் இருக்கும் குளம் உள்ளிட்ட நீர் நிலைகளில் சூரியனின் பிம்பம் தெளிவாகத் தெரிகின்றது. அது போன்று உலகில் தோன்றியுள்ள அனைத்துப் பொருள்களிலும் அந்த ஏக இறைவனே (சிவபரமாத்மாவே)
வீற்றுள்ளார். இங்கு அலையில்லா நீர்நிலையென்று ஏன் சொல்ல வேண்டும்? அலையடித்துக் கொண்டிருக்கும் போது, அந்த நீரில் சூரியனின் பிம்பம் மூழுமையாக, சரிவரத் தோன்றாது. அது போல், பல சித்தாந்த குழப்பங்களும், சந்தேகங்களும்
எழுந்துகொண்டிருக்கும் மனத்தில் அந்த ஏக இறைவன் சரியாகத் தென்படமாட்டார். ஆகையால், கலங்காத நீரில் தெரியும் கதிரவன் பிம்பம் போல், அத்வைத சாதகன் எல்லாவற்றிலும் இறைவனைக் காண்கிறான்.அப்படியிருக்க, இவன் அறிவு நிறைந்த பிராமணன் (விப்ர) என்றும், இவன் ஒதுக்கதக்க வேறு ஆள் என்று பாகுபடுத்திப்
பார்ப்பதற்கும், இவர்களில் யார் உயர்ந்தவன், யார் தாழ்ந்தவன் என்று சந்தேகம்
கொண்டு நோக்குவதற்கும் என்ன அவசியம் நேர்ந்தது.?

கிம் கங்காம்புனி பிம்பிதே
அம்பரமணௌ சாண்டாளவீதீபய:|
பூரே வா அந்தரமஸ்தி காஞ்சனகடி
ம்ருத்கும்பயோர்வா அம்பரே||

கங்கையின் நீரினிலும் குட்டையின் நீரினிலும் காண்கின்ற சூரியனில் வேற்றுமை
உண்டோ?பாத்திரம் மண்ணோ கனகமோ பிம்பத்தின் தோற்றத்தில் மாற்றமுமுண் டோ?
புனித நதி என்று போற்றப்படுகின்ற கங்கை நதியின் நீராக இருந்தாலும் சரி அல்லது
சேரிகளில் தேங்கி நிற்கின்ற குட்டையில் உள்ள நீராக இருந்தாலும் சரி, அந்தத் தண்ணிரில் பிரதிபலிக்கின்ற சூரியனில் ஏதாவது வேற்றுமை தென்படுகிறதா? கங்கை
நதியில் தோற்றம் அளிக்கின்ற சூரியன் உய்ர்ந்தது என்றும்,சேரிப் புறத்து நீரில்
தெரிகின்ற சூரியன் தாழ்ந்தது என்றும் கூறமுடியுமா? மேலும், தண்ணீரைத் தாங்கி
நிற்பது மட்பாண்டமாக இருந்தாலும் சரி, பொற்குடமாக இருந்தாலும் சரி, அதில்
தெரியும் சூரியனின் பிம்பதில் எந்த மாற்றமும் ஏற்பட்டுவிடப் போவதில்லை. அது
போல், எந்த உயிரினமாக இருந்தால் என்ன? எந்த மனிதராக இருந்தால் என்ன? அனைவரிலும் அனைத்திலும் உறைவது அந்த பரமாத்மனே அன்றோ? என்று
சிவபெருமான் கேட்கின்றார்.

இவ்வாறு கேட்கப்பட்ட கேள்விகளின் உட்பொருளை உணர்ந்த ஆதிசங்கரர் தன் முன்னே சண்டாள வடிவிலே ஞானம் போதிக்கும் சிவபெருமானைச் சரணடைகிறார். எல்லாவற்றிலும் இறைவனைக் காணும் அனுபூதியை அடைந்த ஒருவர், எந்தச் சாதியை
சேர்ந்தவராக இருந்தாலும், எத்தகையவராக இருந்தாலும், தன்னால் குரு என ஏற்றுக் கொள்ளத்தக்கவர் என்பதை ஒப்புக் கொண்டு ஓர் ஒப்புதல் வாக்கு மூலம் போன்று
ஐந்து ஸ்லோகங்களை ஸ்ரீ ஆதிசங்கரர் கூறுகிறார். 

ஒப்புதல் ஐந்து.

ஜாக்ரத்ஸ்வப்ன ஸுஷுப்திஷு
ஸ்புடதரா யா
ஸம்விதுஜ்ஜ்ரும்பதே
யா ப்ரஹ்மாதி
பிபிளிகாந்ததனுஷு ப்ரோதா
ஜகத்ஸாக்ஷிணி|
ஸைவாஹம் ந ச த்ருச்யவஸ்திவதி
த்ருடப்ரக்ஞாபி யஸ்யாதி சேச்
சண்டாளோs ஸ்து ஸ து
த்விஜோஸ்துகுருரித்யேஷா:
மணீஷா மம ||

விழிப்பு கனவுதூக்கம் மூநிலையில் பத்மனாதி சிற்றெறும்பாய் விரிந்து தோற்றம்கொள்
பேரியக்கம் காணாமல் கண்டிருக்கும் பேருண்மை நானென்ற நம்பிக்கை கொண்டோன் பஞ்சமனோ பார்ப்பானோ ஒப்புகிறேன் எந்தன் குரு...................(1)

விழிப்பு (ஜாக்ரதா), கனவு (ஸ்வப்பனம்), மற்றும் உறக்கம் (ஸுஷுப்தி) ஆகிய மூன்று
நிலைகளிலும் அந்த ஒரே ஆன்மாதான் (சிவ பரமாத்மன்) படைப்புக் கடவுள்ஆன பிரம்மா
முதல் (பத்மம் எனப்படும் தாமரையில் வீற்றிருப்பதால் பிரும்மாவுக்கு பதுமன், பத்மன் என்ற பெயர்கள் உண்டு.)சின்னஞ்சிறிய எறும்பு வரையான பல்வேறு உயிரினங்களாகத் தோற்றம் காண்கின்றன. அந்த ஏக ஆன்மாதான் பிரபஞ்சத்தின் இயக்கமாக விளங்குகிறது. (நம்மால்) அதனை நேரடியாகக் காணமுடியாது ஆனால், உலகின் செயல்பாடுகள்
அனைத்தையும் கண்காணித்துக் கொண்டிருக்கின்ற சாட்சியாக அந்த ஏக ஆன்மா
திகழ்கிறது. அப்படிப்பட்ட பேருண்மையான சிவமே (ஏக ஆன்மாவே) நான் என்பதில் (
அதாவது அந்தப் பரமாத்வே தன்னுள் உறைவதாக எவன் ஒருவன் நம்பிக்கை கொள்கிறானோ, அப்படிப்பட்டவன் சாதியில் பஞ்சமனாக இருந்தாலும்) சரி, அல்லது கற்பிதமான இந்தச் சாதிமுறையில் உயர்ந்தவனாகக் கருதப்படும் பிராமணனாக
இருந்தாலும் சரி, அவரை எனது குருவாக நான் ஏற்றுக்கொள்கிறேன் என்கிறார்
ஸ்ரீஆதிசங்கரர்.

பிரஹ்மோவாஹமிதம் ஜக்ச்ச ஸகலம்
சின்மாத்ரவிஸ்தாரிதம்
ஸர்வம் சைததவித்யயா
திரிகுண்யாs சேஷம் மயா
கல்பிதம்|
இத்தம் யஸ்ய த்ருடா மதி: ஸுகரே
நித்யேபரே நிர்மலே
சண்டாளோs ஸ்து ஸ து த்விஜோஸ்து
குருரித்யேஷா மனிஷா மம||

அறியாமை முக்குணத்தால்
வேற்றுமை தென்படினும்
ஆனதெல்லாம்
அஃதொன்றின் தோற்றங்களே அத்தகு
நித்ய நிர்மல
பேருண்மை நானென்ற நம்பிக்கை
கொண்டோன் பஞ்சமனோ
பார்ப்பானோ ஒப்புகிறேன்
எந்தன்குரு...... (2)

உலகில் தோன்றிய அனைத்துமே அந்த பரப்பிரம்மத்தின் பரிமாணங்களே. அதாவது உலகில் காணப்படும் அனைத்து வஸ்துகளும் உயிரினங்களும் அந்தப் பரம்பொருளின்
வெளிப்பாடுகளே. பரமாத்மாவும், ஜீவாத்மாக்களும் ஒன்றேதான் வேறு வேறு அல்ல.
இதைத்தான் சின்முத்திரையாக (கட்டை விரலும் ஆட்காட்டிவிரலும் இணைந்த
வட்டமாக) இறைவன் உணர்த்துகிறார். ஆனால், சத்வம், ரஜோ, தமோ ஆகிய
முக்குணங்களால் தோன்றிய பிருகிருதியயின் கூட்டால், அந்த பரமபுருஷ தத்துவத்தை
உணர்ந்துகொள்ள முடியாத வேற்றுமைகள் தென்படுகின்றன. அதாவது வெளிப் பார்வைக்கு நம்மால் பாகுபடுத்திப் பார்க்கப்படும் பல்வேறு உயிர் இனங்கள் மற்றும் பொருள்களின் அடிப்படையாகத் திகழும் ஜீவரசம் , ஆற்றல் ஒன்றுதான். ஆகவே பரபிரும்மம், சிவபரமாத்மா, எப்போதும் நிலைத்து நிற்கக் கூடிய நித்தியமாய், எவ்வித களங்கமோ குறைகளோ இல்லாத நிர்மலமாய் திகழ்கின்ற அந்தப் பேருண்மை
நான் என்பதை உணர்ந்து, அதில் திளைப்பவர் பஞ்சமரோ, பிராமணரோ அவரே எந்தன் குரு என்பதை ஒப்புக் கொள்கிறேன் என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர்


ச்சச்வன்ன ச்வரமேவ
விச்வமகிலம் நிச்சித்ய வாசா
குரோர்
நித்யம் ப்ரஹ்ம நிரந்தரம்
விம்ருசதா
நிர்வ்யாஜசாந்தாத்மனா|
பூதம் பாதி ச துஷ்க்ருதம்
ப்ரதஹதா ஸம்வின்மயே பாவகே
ப்ராரப்தாய ஸமர்பிதம்
ஸ்வவபுரித்யேஷா மனீஷா மம||

நிலையில்லா மாயை பிரபஞ்சம்
வந்துற்ற பிறப்பும்
நிரந்தர நிச்சயத்தை எண்ணவாம்
ஐயமற-அத்தவமாம்
தீயில் பிறவித் துயர் பொசுக்க
என்றாசான் செப்பியதை
அப்படியே திண்னமுற
ஒப்புகிறேன் நான். ............(3)

விரிந்து பரந்துள்ள இந்தப் பிரபஞ்சம் முழுவதுமே நிலையில்லாத மாயை ஆகும். இங்கு
ஒரு விஷயத்தை விளக்க வேண்டியிருக்கிறது. மாயை என்பது பொய்யன்று. உண்மையும் அன்று. குறிப்பிட்ட காலத்துக்கு உண்மை போலத் தோற்றம் அளிப்பதே மாயை. உண்மை என்பது 'உள்' என்ற வேர்ச் சொல்லிலிருந்து உருவானது.அதாவது உள்ளதென்று பொருள். ஆக, உண்மை என்பது எக்காலத்திலும் உள்ளதாக
இருத்தல் வேண்டும். எல்லாம் வல்ல இறையாற்றல் ஒன்றுதான் எப்போதும் இருக்கக் கூடிய உண்மை. (சாஸ்வதமான சத்தியம்). ஆனால், இந்தப் பிரபஞ்சமானது குறிப்பிட்ட காலத்தில்மட்டுமே இருக்கக் கூடியது. ஆகையால், ஒருவகையில் உண்மை. ஆனால், அந்தக் காலக்கெடு முடிந்ததும் பிரபஞ்சம் அழிந்து, இல்லாமல் போய்விடுகிறது. ஆகையால் பொய்யாகவும் முடிகிறது. அதே போல்தான் இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள
எல்லா வஸ்துகளும், குறிப்பிட்ட காலம் வரை இருந்து மறைகின்றன. இதற்குப் பெயர்தான் மாயை. இதனை 'கயற்றரவு' என்ற வார்த்தையால் மகாகவி பாரதி விளக்குவார். அதாவது காற்றில் அசையும் கயறு, தூரத்தில் நின்று பார்க்கையில் அரவம்
போல்(பாம்பு) அசையும். அந்தக் காற்று நின்றுவிட்டால் அது வெறும் கயறு என்பது தெரியும். அதுபோல், பிராணன் என்று காற்று இருக்கும் வரை உயிரினங்கள் அசைகின்றன. பின்னர் மடிந்து விடுகின்றன. ஆகையால் இவையெல்லாம் மாயை.
நிரந்தனமான நிச்சயம் அந்த ஏக ஆத்மாவான சிவம் மட்டுமே. அந்த
உண்மையை ஐயமின்றி உணர்ந்து கொள்வதற்காகத்தான் மிக உயர்ந்த பிறப்பான மானுடப் பிறப்பு வாய்த்திருக்கிறது. ஆகையால், இப்பிறவியில் அந்த ஏக ஆன்ம
ரூபத்தை அறிந்து,தியானித்து ஞான நிலைபெற்று, இனிமேலும் பிறவி எடுக்காமல்
இருக்கும் தவத்தை மேற்கொள்ளவேண்டும். தவம் என்பதற்கு ஒரு விஷயத்தில்
உறுதியாக நிற்றல், தொடர்ந்து மேற்கொள்ளுதல் என்று பொருள். ஆக, அழிவில்லாத, ஆதியும் அந்தமும் இல்லாத, என்றுமே மாறாத, எல்லாவற்றிலும் வியாபித்து நிற்கும் அந்த பரமாத்மாவே அனைத்து உயிரினங்களிலும் உறைகிறார் என்ற இடைவிடாத எண்ணமே தவம் ஆகும். குருவாக வந்து அந்த இறைவனே உபதேசித்த இந்த அரிய தத்துவத்தை அப்படியே ஒப்புக் கொள்கிறேன் என்கிறார் ஸ்ரீ ஆதிசங்கரர்.

யா திர்யங்நர
தேவதாபிரஹமித்யந்த: ஸ்புடா
க்ருஹ்யதே யத்பாஸா
ஹ்ருதயாக்ஷதேகவிஷயா
பாந்தி ஸ்வதோs சேதனா:|

தாம் பாஸ்யை:
பிஹிதார்கமண்டலநிபாம்
ஸ்பூர்தி ஸதா பாவயன்
யோகீ நிவ்ருதமானஸோ ஹி
குருரித்யேஷா மணீஷா மம||

சூரியன் ஜோதியை மேகம்
மறைத்தாற்போல் உண்மையைச்
சூழ்ந்திடும் ஈனமதி நீங்கி
அனைத்தும் இயக்குகிற
ஆண்டவன் தன்னிருப்பும்
தன்மையும் தன்னுள் அறிபவர்
யோகியென்றே திண்ணமுற
ஒப்புகிறேன் நான்......(4).

ஆண்டவன் அனைத்திலும் வியாபித்துள்ளார். அவர் இல்லாத வஸ்து என்று எதுவுமில்லை. அவரே அனைத்தின் இயங்கு சக்தியகவும் விளங்குகிறார்.நம் மூலமாக அனைத்து செயல்களையும் செய்பவர் அவரே. ஆனால், சூரியனின் பிரகாசத்தை
மேகம் மறைப்பது போல, அந்த ஆண்டவன் குறித்த உண்மையை அறிய இயலாமல் நமது அறியாமை மறைத்துள்ளது. அந்த அவித்தை நீங்கி, ஆண்டவனின் இருப்பையும் தன்மையையும் தனக்குள்ளேயே உணர்ந்து அறிந்துகொள்பவர் மாபெரும் யோகி ஆவார். இதனை ஐயமின்றி, உறுதியுடன் நான் ஒப்புக்கொள்கிறேன் என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர்.

யதிஸௌக்கியாம்புதிலேசலேதத
இமே சக்ரதயோ நிர்வ்ருதா
யச்சித்தே நிதராம்
ப்ரசாந்தகலனே லப்தவா
முனிர்நிர்வ்ருத: |
யஸ்மின்னித்யஸுகாம்புதௌ
கலிததீர்ப்ரஹ்மைவ ந
ப்ரம்ஹவித்
ய: கச்சித்ஸ
ஸுரேந்த்ரவந்திதபதோ நூனம்
மணீஷா மம ||

தேவர்கோ தெய்வங்கள் எல்லோரும்
பூசிக்கும் போதிலும்
தன்னுள் அமைதியாய்
தானிருக்கும் பேரொளியைத்
தன்னுள்
லயித்திடுவோன் தானறிவான்
அப்பிரும்மம் அம்மட்டோ
அப்பிரும்மம்
ஆயிடுவான் திண்ணமுற
ஒப்புகிறேன் நான்.....(5)

எவனொருவன், தேவர்களின் தலைவனான இந்திரனும், மற்ற தேவதைகளும் தனது தவ வலிமையால் தன்னைப் போற்றித் துதிக்கின்ற உயர்ந்த நிலையை அடைந்துவிட்ட
போதிலும், அதனால் மனம் பிசகாமல், ஆணவம் அடையாமல், ஆர்ப்பரிக்காமல், அமைதியாக இருந்து, தனக்குள் அமைதியாய், அன்பே வடிவாய் வீற்றிருக்கும் அந்தச் சிவப்பேரொளியில் லயித்து, அதனை தியானிக்கிறானோ அந்த மனிதன், பிரும்ம சொரூபமாக விளங்கும் சிவ பரமாத்மாவை முழுமையாக உணர்ந்து கொள்கிறான். அது மட்டுமின்றி, அந்த பிரும்மம் ஆகவும் அவன் ஆகிவிடுகிறான். அதாவது அந்த பிரம்மத்துடன் ஐக்கியமாகி, மீண்டும் பிறந்திறவாத அமரத் தன்மையை அடைகிறான்
என்பதை உறுதியாக ஒப்புக்கொள்கிறேன் என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். எவ்வாறெனில்,
பிரும்மம் என்பது அனைத்திலும் ஆதாரசக்தி. அனைத்து வஸ்துக்களிலும் அந்த ஆதார
சக்தியே உறைகிறது. ஆக, ஒட்டு மொத்த பிரபஞ்சத்தின் உயிர்சக்திதான் பிரும்மம்.
அது முழுமையானது. ஆகையால், அஹம்பிரும்மாஸ்மி, த்வம்பிரம்மாஸ்மி, சர்வம்
ப்ரும்மாம: அதாவது நானும் பிரும்மம், நீயும் பிரும்மம், யாவையும் பிரும்மம். இந்த
உண்மையை உணர்ந்து கொள்வதால்,அறிவு மயக்கம் அடைந்துவிடாமல் அமைதியாக
இருப்பவனே அந்த பிரும்மத்தில் ஐக்கியம் ஆகிறான்.



இவ்வாறு ஐந்து ஸ்லோகங்களைக்கூறி, அனைத்திலும் ஆண்டவன் இருப்பதால்,
மனிதருக்குள் உயர்வு தாழ்வு இல்லை. பிரும்மத்தை உணர்ந்தவன் எந்தச் சாதியைச்
சேர்ந்தவனாக இருந்தாலும் அவன் வணக்கத்திற்குரிய ஆசாரியான், அவன்
மதிப்பிற்குரிய யோகி, எல்லாவற்றையும்விட போற்றுதலுக்குரிய பிரும்மமாகவும் அவன்
ஆகிறான் என்பதை ஸ்ரீஆதிசங்கரர் அருமையாக எடுத்துரைத்துள்ளார்.

நிறைவுச் செய்யுள்.
தாஸமஸ்தேs ஹம் தேஹத்ருஷ்யாs
ஸ்மி சம்போ ஜாதஸ்தேம்s ஸோ
ஜீவத்ருஷ்யா
த்ரித்ருஷ்டே|
ஸர்வஸ்யாs s
த்மன்னாத்மத்ருஷ்யா
த்வமேவேத்யேவம் மே
தீர்நிச்சிதா
ஸர்வசாஸ்த்ரை:||


நன்றி : (தமிழ் அர்த்தம்) http://detroit-satsangam.com/viewtopic.php?f=5&t=46
தொடரும் 

27 கருத்துகள்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

mudhal முதல் சரணம்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

நேத்துக்கூட ஃபோன்ல பேசும்போது நல்லாத்தான் பேசுனாரு.. பாவம் இப்படி ஆகிட்டாரு,,நல்லவங்களைத்தான் ஆண்டவன் ரொம்ப சோதிக்கிறான்...

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

>>இதனை 'கயற்றரவு' என்ற வார்த்தையால் மகாகவி பாரதி விளக்குவார்

பெரியப்பா.. ஒருடவுட்.. புதுமைப்பித்தனின் கதைகளில் கயிற்றரவு என வருதே அதுவும் ,இதுவும் ஒண்ணுதானா?

'பரிவை' சே.குமார் சொன்னது…

neenda pathivu... vilakkam arumai...

எல் கே சொன்னது…

http://detroit-satsangam.com/viewtopic.php?f=5&t=46


ஸ்லோகங்களை எடுத்த இணையத் தளத்தின் முகவரி சேர்க்க மறந்துவிட்டேன். வீட்டிற்க்கு சென்றவுடன் சேர்த்து விடுகிறேன்

சாந்தி மாரியப்பன் சொன்னது…

நல்லதொரு தொடர்.. அருமையா போகுது

பத்மநாபன் சொன்னது…

தொய்வில்லாத நீண்ட நெடும் பதிவில் ஸ்லோகங்களும் விளக்கங்களும் சிறப்பாக வந்துள்ளது..எல்லாம் ஒன்றே எனும் தத்துவத்தை புரிந்துக் கொண்டால் மனித குலத்திற்குள் சண்டை சச்சரவின்றி இனிமையாக வாழலாம் ..

தவம் என்பதன் விளக்கம் -சிறப்பு

வெங்கட் நாகராஜ் சொன்னது…

நல்ல விளக்கம். நன்றி கார்த்திக்.

கோலா பூரி. சொன்னது…

\\இவ்வாறு ஐந்து ஸ்லோகங்களைக்கூறி, அனைத்திலும் ஆண்டவன் இருப்பதால்,
மனிதருக்குள் உயர்வு தாழ்வு இல்லை. பிரும்மத்தை உணர்ந்தவன் எந்தச் சாதியைச்
சேர்ந்தவனாக இருந்தாலும் அவன் வணக்கத்திற்குரிய ஆசாரியான், அவன்
மதிப்பிற்குரிய யோகி, எல்லாவற்றையும்விட போற்றுதலுக்குரிய பிரும்மமாகவும் அவன்
ஆகிறான் என்பதை ஸ்ரீஆதிசங்கரர் அருமையாக எடுத்துரைத்துள்ளார்//.
மிகவும் ரசித்த வரிகள்.

ஸ்ரீராம். சொன்னது…

முழுதும் படித்து விட்டேன். அழகாக பொறுமையாக விளக்கி இருக்கிறீர்கள். எடுத்து சேமித்து வைத்து விட்டேன்.

எல் கே சொன்னது…

@செந்தில்

இப்பவும் நல்லாத்தான் இருக்கேன். எனக்குத் தெரிஞ்சு இந்த கயற்றரவு வச்சிதான் பெரும்பாலான தத்துவங்களை சொல்லி இருக்காங்க

எல் கே சொன்னது…

@குமார்

அதற்க்கு அர்த்தமும் விளக்கமும் போட்டதால் நீளமா போய்டுச்சு

எல் கே சொன்னது…

@சாரல்

நன்றி


@பத்மநாபன்
நானாக எதையும் எழுதவில்லை. ஏற்கனவே நடந்தடஹியும், பலர் ஏற்கனவே எழுதி உள்ளதையும் தேடி பிடித்து என் நடையில் இங்கு தருகிறேன். அவ்வளவே.

எல் கே சொன்னது…

@கோமு

நன்றிங்க

@ஸ்ரீராம்

ஆனா, பதிவில் சுட்டி தர மறந்துவிட்டேன். நான் மொழிபெயர்ப்பு செய்யவில்லை. தவறாக எண்ணவேண்டாம். இது என்னுடையக் கவனக் குறைவு

ADHI VENKAT சொன்னது…

நல்ல விளக்கங்கள். பகிர்வுக்கு நன்றி.

RVS சொன்னது…

அற்புதம் எல்.கே. முடிந்தவுடன் ஒன்றாக சேர்த்து ஒரு பி.டி.எப் விடுங்க.. பத்திரப்படுத்தி வச்சுக்கலாம்... ;-))))

geetha santhanam சொன்னது…

கயற்றறிவு, மாயை- விளக்கங்கள் அருமை. சிவபெருமானும்ஆதிசங்கரருமே கூறியும் ஆண்டுகள் பல ஆனபின்னும் தீண்டாமை கொடுமை முழுவதும் நீங்கவில்லையே.

Geetha Sambasivam சொன்னது…

புதுமைப் பித்தனின் கயிற்றரவும் இந்தப் பொருளில் தான் வரும். கயிறு மட்டும் என்ன? கொடியில் தொங்கும் புடலையை இரவில் பார்த்தாலும் பாம்பென்றே நினைப்போம், பகலில் தான் புடலை என்று. அது பாம்பில்லை என்ற தெளிவு வருகிறாப் போல் எல்லா விஷயங்களிலும் தெளிவு வரவேண்டும்.

raji சொன்னது…

ஸ்லோகங்களும் விளக்கங்களும் அருமை
எளிமையாக புரிந்து கொள்ளக் கூடிய வகையில் நன்றாக
விளக்கி எழுதியுள்ளீர்கள்.
ஏற்கனவே உள்ளதை தந்திருப்பதாக நீங்கள் கூறினாலும்
உங்கள் நடையில் எளிமையாக கூறி புரிய செய்ய தனி
திறாமை வேண்டும்தான்.மிக்க நன்றி

குறையொன்றுமில்லை. சொன்னது…

கார்த்தி, இந்தப்பதிவு கொஞ்சம் பெரிசா இருந்தது இல்லியா,இடையே அருமையான ஸ்லோகங்களும் இருந்ததா? சேர்ந்தாப்போல ரெண்டு தடவை படிச்சபின் தான் உள்வாங்கிக்கொள்ள முடிந்தது. நல்லா
இருக்கு.

எல் கே சொன்னது…

@ஆதி

நன்றி

எல் கே சொன்னது…

@கீதா சந்தானம்
நாம் என்றுமே முன்னோர்கள் சொன்ன நல்லதை விட்டு விடுவோம். அதுதான் நடக்கிறது.

எல் கே சொன்னது…

@கீதா சாம்பசிவம்


இரண்டுமே குறியீடுகள் தானே ?

எல் கே சொன்னது…

@ராஜி

அவன் இன்றி ஒரு அணுவும் அசையாது. அவன் விருப்பம்தான் எல்லாம்.

எல் கே சொன்னது…

@லக்ஷ்மி

ஆமாம். சுலோகம் முழுசா வரணுமே. சமஸ்க்ருத சுலோகம் மட்டும் போட்டால் புரியாதே. அதுதான் அர்த்தம/தெளிவுரை எல்லாம்

மோகன்ஜி சொன்னது…

அற்புதமான பதிவு எல்.கே! நம் பொக்கிஷங்களை எண்ணும்போது மிகப் பெருமையாய் இருக்கிறது. இந்தப் பதிவு சேமித்து வைத்து மீண்டும்மீண்டும் பார்த்து உணர வேண்டிய ஒன்று.. அருமை

Arun Ambie சொன்னது…

பதிவு நீளம் அதிகம். விஷயம் கனம் அதிகம். படித்து முடிக்க நான் எடுத்துக் கொண்ட நாட்களும் அதிகம். தெளிவான புரிதல் மட்டுமே எனக்குக் குறைவு!! எவ்வளவு படித்தாலும் புரியாத மாதிரியே இருக்கிறது! ஆனால் உங்கள் விளக்கங்கள் மிகவும் நன்று. வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை. வாழ்க.